தமிழ்நாடு செய்திகள்

கூடா நட்பு கேடு தரும்! கோவை கல்லூரி மாணவிகளுக்கு நடந்த கொடூரம்... போலீஸ் விசாரணை

Published On 2026-02-06 14:50 IST   |   Update On 2026-02-06 14:50:00 IST
  • மார்பிங் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தை சம்பந்தப்பட்ட மாணவிகளின் செல்போனுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்ட தொடங்கி உள்ளனர்.
  • மாணவிகள் மற்றும் வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

உன்னுடைய நண்பர்கள் யார் என்று சொல். நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்று ஒரு பழமொழி உண்டு.

எனவே தோழனையோ தோழியையோ தேர்வு செய்யும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதை கோவையில் நடந்த சம்பவம் மீண்டும் அனைவருக்கும் எடுத்துக்காட்டி உள்ளது.

கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகள் தோழிகளாக பழகி வந்தனர். அந்த மாணவிகளில் 2 மாணவிகள், 2 வாலிபர்களை காதலித்து வந்தனர்.

அந்த 2 மாணவிகளின் காதலர்கள், தங்களது காதலிகளிடம் அவர்களுடன் படிக்கும் சக மாணவிகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது மாணவிகள் 2 பேரும் தங்களது காதலர்களிடம் சில பணக்கார மாணவிகள் குறித்த விபரங்களையும் பரிமாற்றம் செய்துள்ளனர்.

இந்த விபரங்களை அறிந்து கொண்ட அந்த வாலிபர்கள், பணக்கார மாணவிகளின் விபரத்தை அனுப்பி வைக்கும்படி செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 2 காதலிகளும், அந்த 2 மாணவிகளின் புகைப்படங்களையும், அவர்களது செல்போன் எண்களையும், தங்களது செல்போனில் இருந்து தங்களது காதலர்களின் செல்போனுக்கு அனுப்பியுள்ளனர்.

புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட அந்த வாலிபர்கள், மாணவிகளின் புகைப்படத்தை அவதூறாக மார்பிங் செய்துள்ளனர்.

தொடர்ந்து மார்பிங் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தை சம்பந்தப்பட்ட மாணவிகளின் செல்போனுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்ட தொடங்கி உள்ளனர்.

இதை பார்த்த அந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் அவர்களிடம் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என கேட்டு மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சியான மாணவிகள், தங்கள் புகைப்படம் எப்படி இவர்களின் கைகளுக்கு கிடைத்தது என விசாரித்தனர். அப்போது தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. தங்களுடன் இவ்வளவு நாட்கள் தோழிகளாக பழகிய சக மாணவிகளே இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாணவிகள் கோவை மாவட்ட போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தோழிகளாக நடித்து சக கல்லூரி மாணவிகளே 2 தோழிகளையும் சிக்கலில் சிக்க வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவிகள் மற்றும் வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த வாலிபர்கள் இதுபோன்று வேறு மாணவிகளையும் மிரட்டி பணம் பறித்துள்ளனரா? அல்லது வேறு வகையில் அவர்களை தவறாக பயன்படுத்தினார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News