தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க ஆட்சியில் குழந்தை முதல் பாட்டி வரைக்கும் யாருக்குமே பாதுகாப்பு இல்லை- அண்ணாமலை

Published On 2026-03-14 11:22 IST   |   Update On 2026-03-14 11:22:00 IST
  • அரசியலில் உயர் பொறுப்புக்கும், அதிகாரத்திற்கும் வருபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.
  • தாய்மார்கள் தான் அரசியல் திசையை மாற்றுவார்கள். களத்தை மாற்றுவார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவை தொண்டாமுத்தூரில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

கடந்த 10-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல கிருஷ்ணகிரியில் 2 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யாராவது ஈடுபட்டால் அவர்களால் வெளியே இருக்க முடியுமா?. ஆனால் இன்று தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் குழந்தை முதல் பாட்டி வரைக்கும் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக, எம்.எல்.ஏ.வாக ஏழை மக்களோடு சேர்ந்து பழகிய அனுபவம் மிக்கவர். விவசாய குடும்பத்தில் பிறந்து ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளராக இருக்ககூடிய அனுபவம் உள்ளவர்.

நம்மைப் பார்த்த உடனே இந்த பிரச்சினைக்கு தான் வந்திருக்கிறோம் என்று ஒரு தலைவருக்கு தெரிய வேண்டும் அப்படிப்பட்ட ஒரு தலைவராக தான் எடப்பாடியார் நம்முடன் இருக்கிறார். அரசியலில் உயர் பொறுப்புக்கும், அதிகாரத்திற்கும் வருபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.

தாய்மார்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் போட்டு விட்டதால் அவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாக தி.மு.க. நினைத்து கொண்டிருக்கிறது. ஆனால் தாய்மார்கள் யாரும் சந்தோஷமாக இல்லை. அவர்களுக்கு வர வேண்டிய பணம் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது. அவ்வளவு தான். இதில் சந்தோஷப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

தாய்மார்கள் தான் அரசியல் திசையை மாற்றுவார்கள். களத்தை மாற்றுவார்கள். அவர்கள் தான் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என முடிவு செய்வார்கள். தாய்மார்கள் முடிவு செய்து விட்டனர் நமக்கு இந்த தி.மு.க ஆட்சி வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டனர்.

நாம் எல்லோரும் ஒரே குடும்பம். ஆனால் தி.மு.க.விற்கு சபரீசன் குடும்பம், உதயநிதி குடும்பம் மட்டுமே தவிர வேறு யாரும் குடும்பம் கிடையாது. யார் என்ன மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டை கூறினாலும் நாம் அனைவரும் ஒரே அணி. அது தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே.

கடந்த 5 ஆண்டுகளில் மகளிருக்கு 37 ஆயிரம் கொடுத்துள்ளனர். மொத்தம் 1,825 நாட்களில் ஒருநாளுக்கு 20 ரூபாய் வீதம் கொடுத்துள்ளனர்.

2021-ல் ஒரு குடும்பத்திற்கு ரூ.2.10 லட்சம் கடன் இருந்தது. தற்போது ரூ.4.82 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மகளிருக்கு தி.மு.க 37 ஆயிரத்தை கொடுத்து விட்டு, அவர்களிடம் இருந்து ரூ.2.72 லட்சத்தை திருடியுள்ளது.

234 தொகுதிகளிலும் நாம் தப்பி தவறி தி.மு.க.விற்கு ஓட்டுபோட்டோம் ஆனால் அது நமது தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டு கொள்வதற்கு சமம்.

5 ஆண்டுகளில் 8,008 படுகொலைகள் நடந்துள்ளன. 2,080 கற்பழிப்புகள் நடந்துள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மீது 39 ஆயிரத்து 900 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

சராசரியாக ஒரு நாளைக்கு 22 குழந்தைகள் மீது குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இதனால் எந்த காரணத்தை கொண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது.

கோவை மக்கள் பக்கத்து ஊரையும் கெடுத்து விடுவார்கள் என்று தயாநிதிமாறன் கூறும்போது செந்தில்பாலாஜி கைதட்டி சிரிக்கிறார். இதற்கு வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News