தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் - தமிழக அரசு
- பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
- எந்த தற்காலிக தூய்மை பணியாளரும் பணிநீக்கம், பணி மறுப்பு செய்யப்படவில்லை.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
போராட்டத்தை கைவிட்டு சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சி வலியுறுத்தி உள்ளது.
எந்த தற்காலிக தூய்மை பணியாளரும் பணிநீக்கம், பணி மறுப்பு செய்யப்படவில்லை. பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்துகொள்ள வேண்டும். பணிப்பாதுகாப்பு மற்றும் பணப்பலன்கள் வழங்குவதை மாநகராட்சி உறுதி செய்யும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.