ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவும்: ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர்.
- போர்ச் சூழல் காரணமாக அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, தமிழ்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் உள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுத்தியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 498 மீனவர்களும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 78 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 72 மீனவர்களும் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 3 மீனவர்களும், ஆகமொத்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவிப்பதாகவும், அங்கு அதிகரித்து வரும் போர்ச் சூழல் காரணமாக அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, தமிழ்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் உள்ளனர்.
மேலும், மீனவர்களின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் ஏதும் இல்லாத காரணத்தால், தாயகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். மீனவர்கள் தாயகம் திரும்பும் செய்திக்காக காத்திருக்கின்றனர். தற்போது அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் சிக்கியுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பிட அரசின் உதவியை நாடுகிறேன்.
இந்த மனிதாபிமான விஷயத்தில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் விரைவான தலையீடு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதலைத் தரும். ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும், அவர்களின் நலனை உறுதிப்படுத்தவும், அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கும் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.