திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
- மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று 5-வது நாளாக தொடர்ந்து நடந்தது.
- எழுத்துபூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று 5-வது நாளாக தொடர்ந்து நடந்தது.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதனையடுத்து தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தமாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து எழுத்துபூர்வமான வாதங்களை நாளைக்கும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்புக்கான தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.