தமிழ்நாடு செய்திகள்

கோவையில் அதிமுகவினர் மீது கொலைவெறித் தாக்குதல்: இபிஎஸ் கடும் கண்டனம்

Published On 2026-02-12 02:22 IST   |   Update On 2026-02-12 02:22:00 IST
  • கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது.
  • தமிழகத்தை சீர்குலைத்துள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம் என்றார்.

சென்னை:

கோவையில் அ.தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இபிஎஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர் வார்டு எண். 56, சுங்கம் பகுதியில் கடந்த 5 நாளுக்கு முன் பொதுவெளியில் மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை, இங்கு மது அருந்தக் கூடாது என அறிவுறுத்திய அதிமுக வட்டச் செயலாளர் சுரேஷ்குமார், நேற்று முன்தினம் (09.02.2026) இரவு 8.30 மணியளவில், கட்சி அலுவலகத்தில் கட்சிப் பணிகளை கவனித்து கொண்டிருந்தபோது, 5 நபர் கொண்ட கும்பல் புகுந்து கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வந்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இச்சம்பவத்தில் கட்சியின் வட்ட செயலாளர் சுரேஷ்குமார், கோவை மாநகர் மாவட்டப் பாசறை இணைச் செயலாளர் ஈசா டி.செந்தில் ஆகியோர் மற்றும் தடுக்க வந்த பொதுமக்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்திற்குள் புகுந்து, கட்சியினரைத் தாக்கும் அளவிற்கு குற்றவாளிகள் துணிந்திருப்பதற்கு ஒரே காரணம், இங்கு ஆட்சியில் இருக்கும் சட்டம் - ஒழுங்கைக் காக்கத் திராணியற்ற முதல்வரின் கையாலாகாத தி.மு.க. அரசுதான்.

குற்றவாளிகளின், போதைப் பேர்வழிகளின் புகலிடமாக, சொர்க்க பூமியாக தமிழகத்தை சீர்குலைத்துள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

கட்சியினர் மீதும், பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News