தமிழ்நாடு செய்திகள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ்

Published On 2026-02-11 14:43 IST   |   Update On 2026-02-11 14:43:00 IST
  • ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும்.
  • ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் ரூ.15,900 – ரூ.50,400 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையை மாற்றி தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை தொடர் விடுப்பு எடுத்து, சென்னையில் காத்திருப்புப் போராட்டமும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்திய ஆட்சியாளர்கள், அவர்களும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

ஆனால், அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாததை உணர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கடந்த 4-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தைத் தொடரும் நிலையில், அவர்களிடம் அரசு பேசாமல், 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் பணி நீக்க உத்தரவுகள் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்டு மாநில அளவில் ரகசியமாக பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் 600-க்கும் மேற்பட்டோரை ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.

ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும். இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களாக இருந்துவரும் நிலையில், அக்கிராமங்களின் ஊராட்சி செயலாளராக இருந்துவரும் இவர்களே அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக அடக்குமுறைகள் மூலம் பணியவைக்க முயல்வது மிகத்தவறு.

எனவே அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News