தமிழ்நாடு செய்திகள்

தே.ஜ.கூட்டணியில் இணையும் தேமுதிக? உறுதிப்படுத்திய நயினார் நாகேந்திரன்

Published On 2026-02-11 15:14 IST   |   Update On 2026-02-11 15:14:00 IST
  • தேமுதிகவுடன் பாஜக தலைமையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர்.
  • இதுவரையிலும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், தேமுதிக சேரும் கூட்டணியே வெற்றிப்பெறும் என தொடர்ந்து கூறிவருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். 

இச்சூழலில் நேற்று தேமுதிகவின் கூட்டணி விவகாரம் தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,

"தேமுதிகவுடன் பாஜக தலைமையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர். நேற்று நடந்த பாஜக கட்சி கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. தேமுதிக எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர். மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள். நல்லபடியாக முடியும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

"இதுவரையிலும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அப்படி நடந்தால் நானே உங்களுக்கு சொல்கிறேன். சுதீஷ் என்னுடைய நண்பர். அதன் அடிப்படையில் பேசினேனே தவிர, கூட்டணி தொடர்பாக பேசவில்லை. அப்படி கூட்டணி இருந்தாலும் தற்போதுவரை அதுதொடர்பாக எந்த கருத்துகளும் வரவில்லை. பிரதமர் மார்.1ஆம் தேதி வருவார். அப்போது பார்க்கலாம்." என தெரிவித்தார்.  தொடர்ந்து மேடையில் பார்க்கலாமா என்ற கேள்விக்கு, பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News