தமிழ்நாடு செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக அண்ணாமலை அவதூறு பேசி வருகிறார்- திருமாவளவன்

Published On 2025-10-26 13:42 IST   |   Update On 2025-10-26 13:42:00 IST
  • எப்படி பிரசாரம் செய்தாலும் இனி பா.ஜ.க. தலைமைக்கு இவர் மீது நம்பிக்கை இல்லை.
  • ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

மதுரை:

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது. இதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும். முதலில் தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வரும் வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வழக்கு தொடர்ந்து உள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய 3 சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இதனை நடைமுறைப்படுத்த கூடாது. பீகாரில் வாக்கு திருட்டு நடந்ததை போல் தமிழ்நாட்டிலும் நடைபெறும். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் திரள வேண்டும்.

பல்கலைக்கழக மசோதா சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் மறுசீராய்வு செய்வதாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொடர்ந்து பா.ஜ.க.வின் பொறுப்பில் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்ட நிலையில் அரசியல் செய்வதற்கு களம் இல்லாமல் போனதால் விரக்தி அடைந்துள்ளார். எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராக அவதூறாக பேசிவருகிறார். எப்படி பிரசாரம் செய்தாலும் இனி பா.ஜ.க. தலைமைக்கு இவர் மீது நம்பிக்கை இல்லை.

ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. புதிய சட்டம் சட்டமன்றத்தில் இயற்ற தமிழக முதல்வர் அறிவிப்பு வரவேற்கத்தக்க வகையில் உள்ளது. நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்துள்ளது. ஆணையம் இல்லாமலேயே மசோத சட்டம் கொண்டு வரலாம். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்றபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுயில் எதாவது ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுமா என்ற கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு நடைபெறும்போது முடிவு செய்யப்படும் என்றார்.

Tags:    

Similar News