கர்ப்பத்தை கலைத்ததால் மாணவி உயிரிழப்பு: நர்சு-உதவியாளரிடம் விசாரணை
- ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கில் சிறுமி சண்முகபிரியாவின் 5 மாத கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது.
- சிறுமியுடன் பழகிய உறவினரான சிறுவனிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கொடிவலசா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சண்முகபிரியா (வயது 19) டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சிறுவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியதால் சண்முகபிரியா 5 மாத கர்ப்பம் அடைந்தார். இது பற்றி ஆரம்பத்தில் சண்முகப்பிரியா பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்தார்.
இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கில் சிறுமி சண்முகபிரியாவின் 5 மாத கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த அவருக்கு தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் சண்முகபிரியாவை திருத்தணியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகபிரியா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருத்தணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு கர்ப்பத்தை கலைத்த நர்சு மற்றும் உதவியாளர் ஆகிய 2 பேரையும் போலீஸ்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமியுடன் பழகிய உறவினரான சிறுவனிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.