தமிழ்நாடு செய்திகள்

நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த செங்கோட்டையன்

Published On 2025-09-07 14:25 IST   |   Update On 2025-09-07 14:25:00 IST
  • சத்தியபாமாவின் மகளிர் அணி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.

அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை எல்லாம் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாள் கெடு நிர்ணயித்து இருக்கிறேன். அது நடக்கவில்லை என்றால் இதே கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களை எல்லாம் ஒன்றிணைப்பேன் என்று கூறினார். 

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 1000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து முன்னாள் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவிடம் வழங்கினர். இந்த கடிதங்கள் அனைத்தும் பெறப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

திருப்பூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்திய பாமா தனது வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து சத்தியபாமாவின் மகளிர் அணி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அணி அணியாக திரண்டு வருகின்றனர்.

கோவையை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் செங்கோட்டையனை நேரில் சந்தித்து, சிங்காநல்லூர் சிவன் கோவில் பிரசாதத்தை அளித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர். தன்னை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News