தமிழ்நாடு செய்திகள்

ஜார்ஜ் கோட்டையை நோக்கி பேரணி - தூய்மைப் பணியாளர்கள் கைது

Published On 2025-12-27 10:56 IST   |   Update On 2025-12-27 10:57:00 IST
  • சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
  • கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்து இருந்தனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தூய்மை பணியாளர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் சென்னை பாரிமுனை குறளகத்தில் இருந்து ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.

குறளகத்திற்கு முன்னதாகவே பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்து தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் அவர்களை வாகனங்களில் ஏற்றினர்.

Tags:    

Similar News