தமிழ்நாடு செய்திகள்

இடைக்கால பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் அரண்டு போகிற அளவுக்கு அறிவிப்புகள் இருக்கும் - அமைச்சர் சேகர்பாபு

Published On 2026-02-11 11:12 IST   |   Update On 2026-02-11 11:12:00 IST
  • வரும் 25-ம் தேதிக்குள் 10 முதல்வர் படைப்பகங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
  • எடப்பாடி பழனிசாமி அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவர்.

போரூர்:

சென்னை அசோக் நகரில் மேம்படுத்தப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் 10 இடங்களிலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 25 இடங்களிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் 25-ம் தேதிக்குள் 10 முதல்வர் படைப்பகங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. சென்னை அசோக் நகரில் ரூ.15 கோடி அளவில் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்பட்டு வருகிறது. வருகிற 25-ந்தேதிக்குள் இது மாணவர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.

கேள்வி:- இடைக்கால பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாமா?

பதில்:- எதிர்க்கட்சிகள் அரண்டு போகும் அளவிற்கு நிறைய அறிவிப்புகள் இடம்பெறும்.

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி இல்லை என்றும் டாக்டர் அன்புமணி கூறியுள்ளாரே?

பதில்:- உடைந்த கட்சியின் ஒரு பாகமாக இருக்கின்ற அன்புமணி பேசுவதற்கெல்லாம் பதில் சொன்னால் சரியாக இருக்காது.

கேள்வி:- 7.5 சதவீதம் என்பது நாங்கள் கொண்டு வந்தது என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?

பதில்:- எடப்பாடி பழனிசாமி அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவர். அவர் வாயில் இருந்து உண்மையை தவிர வேறு எதுவுமே வராது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் எடப்பாடி பழனிசாமி. அவருடைய கட்சியில் இருந்து இப்போது வெளியேறி இருக்கின்ற செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் போன்றவர்களிடம் கேட்டால் அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்.

கேள்வி:- த.வெ.க. சார்பில் கருத்து கேட்க சென்றவர்கள் தாக்கப்பட்டு உள்ளார்களே?

பதில்:- அங்கு த.வெ.க.வினருக்கும், பொதுமக்களுக்கும் தான் சண்டை. பொதுமக்கள் தாக்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உண்மை நிலையை களத்துக்கு சென்று விசாரியுங்கள். இது பனையூரில் நடப்பது போன்ற ஒரு மோதல் தான். உண்மை நிலையை விசாரித்து மக்களுக்கு சொல்லுங்கள். இதுபோன்ற செயல்களை வைத்து தங்கள் இயக்கத்துக்கு கலர் மெருகேற்ற துடிக்கின்றார்கள். அதற்கு நாமும் சேர்ந்து விளம்பரம் கொடுக்க தயாராக இல்லை.

கேள்வி:- சட்டசபை தேர்தலில் சென்னையில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- சென்னையில் தி.மு.க.வின் இரு வண்ண கொடிதான் பட்டொளி வீசி பறக்கும். சூரியன் உதிக்கின்ற இடம் கிழக்கு. உதயசூரியனை சின்னமாக கொண்டிருக்கின்ற இந்த இயக்கம்தான் சுடரொளி வீசி பறக்கும். செயின்ட் ஜார்ஜ் கோட்டை எந்நாளும் எங்கள் முதல்வர் வசம் இருக்கும். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடி யாது.

கேள்வி:- சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தான் வெற்றி பெறுமா?

பதில்:- 22 தொகுதிகளிலும் முதலமைச்சரின் வெற்றிக்கொடிதான் பறக்கும்.

கேள்வி:- பா.ம.க.வின் பிரிவினைக்கு காரணம் தி.மு.க. தான் என்று கூறுகிறார்களே?

பதில்:- அன்புமணியால் தனது அப்பாவையே சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு கட்சி வேறு நடத்திக்கொண்டிருக்கிறார். டாக்டர் ராமதாஸ் கதறிக்கொண்டு இருக்கிறார். டாக்டர் ராமதாசை பார்ப்பதற்கே பாவமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News