தமிழ்நாடு செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் - ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு

Published On 2025-12-24 09:54 IST   |   Update On 2025-12-24 09:54:00 IST
  • மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • கடந்த ஒரு மாதமாக இலங்கை கடற்படையினரின் தொந்தரவு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் சிறைபிடிப்பது நடந்துள்ளது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று முன்தினம் ஜோதிபாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை இவர்கள் தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இலங்கை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். எல்லை தாண்டிய குற்றத்திற்காக வருகிற 5-ந்தேதிவரை 12 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மீனவர்களை விடுவிக்கக்கோரி நேற்று தங்கச்சிமடத்தில் பெண்கள் உள்பட 100-க் கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

இதில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாட்களாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை வலியுறுத்தும் வகையில் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று ராமேசுவரம் துறைமுகம் மற்றும் மீன்பிடிஇறங்கு தளத்தில் சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என மொத்தம் 8 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு நாள் வேலைநிறுத்தத்தால் ரூ.1 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை, டிட்வா புயல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த மாதம் முழுவதும் கடலுக்கு செல்ல முடியவில்லை. 25 நாட்களுக்கு மேலாக தடை இருந்ததால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தற்போது கடல் இயல்பு நிலைக்கு மாறி உள்ளதால் கடந்த ஒரு வாரமாக கடலுக்கு சென்று வருகிறோம். கடந்த ஒரு மாதமாக இலங்கை கடற்படையினரின் தொந்தரவு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் சிறைபிடிப்பது நடந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. நேற்று கைதான 12 மீனவர்களுடன் ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள மற்ற மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News