தமிழ்நாடு செய்திகள்

மாநிலங்களவைத் தேர்தல்- கமல்ஹாசன் நாளை வேட்பு மனு தாக்கல்

Published On 2025-06-05 20:35 IST   |   Update On 2025-06-05 20:35:00 IST
  • ஜூன் 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.
  • ஒரு ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி இம்மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது. தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. வழக்கறிஞர் வில்சன், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் நாளை நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News