அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற நெருக்கடி- பூவை ஜெகன்மூர்த்தி
- ஊழல் செய்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது காவல் துறை.
- தி.மு.க.வில் இருந்து சில கட்சிகள் விலகும். விஜய்யோடும் சில கட்சிகள் கூட்டணி சேரும்.
கே.வி.குப்பம்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தில் புதிய கலை, அறிவியல் கல்லூரி தொடக்க விழாவில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி. குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை எம்.ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எனக்கு வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து பேசி வருகிறேன். இதனால் என்மீது, தமிழக அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக, சம்பந்தமே இல்லாமல், என்னை சிக்கலில் சிக்க வைத்துள்ளது. ஐகோர்ட்டு சில கருத்துக்களை சொல்லி உள்ளது. கோர்ட்டுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம்.
ஊழல் செய்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது காவல் துறை. நான் என்ன தீவிரவாதியா? பயங்கரவாதியா? எந்த பிரச்சனையும் இல்லாத ஒரு சாதாரண மனிதனான என்னிடம் இவ்வளவு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இது போன்ற நெருக்கடி கொடுத்தால், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, அவர்கள் கூட்டணிக்கு வந்து விடுவேன் என்ற எண்ணமா? எப்போது இருந்தாலும், நியாயம், உண்மை வெளிப்படும்.
நாங்கள் நியாயத்தை எதிர்பார்க்கிறோம். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம். தி.மு.க.வில் இருந்து சில கட்சிகள் விலகும். விஜய்யோடும் சில கட்சிகள் கூட்டணி சேரும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.