பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை - மதுரையில் 28-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்
- தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
- தலைவர் தகுதியை வளர்த்துக் கொள்வது தம்பி விஜய்யின் கடமை.
சேலம்:
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மையக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. வருகிற சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெல்லும்.
மதுரையில் வருகிற 28-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி அடைவோம் என்று கூறி வருகிறார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 180 தொகுதிக்கு மேல் வெற்றி அடையும் என்று கருத்துக்கணிப்பு கூறி வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கேட்பதால் கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர்களுக்குள் கூட்டணி குழப்பம் இருக்கிறது.
மத்திய அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கிய நிதியை தமிழக அரசு முழுமையாக செலவு செய்யவில்லை. அந்த நிதியை தமிழக அரசு திரும்ப அனுப்பி உள்ளது. இது நிர்வாகத் திறமை இல்லையா? தாழ்த்தப்பட்ட மக்களை தமிழக அரசு புறக்கணிக்கிறதா? தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இல்லையா?.
5 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 575 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தார். அதில் 70 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் ஆட்சி மாற்றம் உறுதி. ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் வருவது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். தலைவர் தகுதியை வளர்த்துக் கொள்வது தம்பி விஜய்யின் கடமை. ஆனால் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்