வாக்காளர் இறுதி பட்டியல் 17-ந்தேதி வெளியீடு: தேர்தல் துணை கமிஷனர்கள் 12-ந்தேதி சென்னை வருகை
- தமிழகத்தில் நடக்கும் தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி தேர்தல் கமிஷனிடம் அவர்கள் தெரிவிப்பார்கள்.
- தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் தேர்தல் கமிஷன் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
சென்னை:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.
இம்மாதம் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதையொட்டி வரும் 12-ந் தேதி தேர்தல் துணை கமிஷனர்கள் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்வார்கள்.
பின்னர் தமிழகத்தில் நடக்கும் தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி தேர்தல் கமிஷனிடம் அவர்கள் தெரிவிப்பார்கள். அதன் பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் தேர்தல் கமிஷன் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
அவர்கள் வருகையின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வருமான வரித்துறை, வங்கிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகளை அழைத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துவார்.