தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது- நயினார் நாகேந்திரன்

Published On 2025-06-19 13:58 IST   |   Update On 2025-06-19 13:58:00 IST
  • விடுதலை சிறுத்தைகள் 15 சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • கலியுகத்தில் இப்போது முருகன் அவதாரம் எடுத்துள்ளார். 2026-ல் அதற்கான பதில் கிடைக்கும்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை வடபழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து அவர் தியானம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 22-ந்தேதி மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டுக்காக கடந்த 15 நாட்களாக நாங்கள் அனைவரும் விரதம் இருந்து வருகிறோம். அதன் காரணமாக வடபழனி முருகன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டோம்.

ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். அவரும் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து வருகிறார்.

22-ந்தேதி தான் மாநாடு நடைபெறுகிறது. ஆனால் இன்றைக்கே மக்கள் மாநாடு நடைபெறும் இடத்துக்குச் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதனை தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார். அவர் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினார். தற்போது நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறோம். அவரைப் போலவே நிறைய பேர் விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

பொதுமக்களுடைய ஆதரவு எங்களுக்கு நிறைய இருக்கிறது. பொதுமக்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.



நாங்கள் இதுவரை மதத்தை பற்றி பேசவில்லை முருகரை பற்றி தான் பேசி வருகிறோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு பயங்கரவாதம் வரும், மத வெறி வரும் என்றெல்லாம் கூறுகிறார். மதம் குறித்து தொடர்ச்சியாக அமைச்சர்தான் பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழ் கடவுள் முருகனை அவர்கள் ஆராதனை செய்தார்கள். தற்போது நாங்கள் ஆராதனை செய்கிறோம். இதில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து எது உண்மையான முருகன் மாநாடு என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

இப்பொழுது தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் 15 சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 தொகுதியாவது வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். இது தி.மு.க.வுக்கு நெருக்கடியாகவே இருக்கும். அதன் காரணமாகவே அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பவன் கல்யாண் முருக பக்தர். அறுபடை வீடுகளுக்கு அவர் ஏற்கனவே வந்து விட்டு சென்றிருக்கிறார். இங்கு வந்து சாமி தரிசனம் மேற்கொள்ளக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா? சாமி தரிசனம் செய்யக்கூடாதா?

வேலை எடுத்து சுற்றியதின் விளைவாக சூரசம்காரம் நடைபெற்றது ஜெயிக்க வேண்டும் என்றால் இறைவன் பல அவதாரங்களை எடுப்பார். எடுக்கப்பட்டிருக்கிறது அதற்கான முடிவுகள் வெளியாகும். இந்த ஆட்சி நீட்டிக்கப்படுமா என்பதை முருகன் தான் முடிவு செய்ய வேண்டும்

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லையே 20,000 ஆசிரியர்கள் இல்லையே முதலமைச்சரை நோக்கி ஏன் கேள்வி எழுப்பத் தயங்குகிறீர்கள்.

டி.ஆர்.பி. தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு என்ன சொல்ல போகிறீர்கள். மத்திய அரசின் நிதி தேவையில்லை நாங்கள் அரசாங்கத்தை நடத்துவோம் என்று கூறுகிறார்கள். மத்திய அரசை பகைத்துக் கொண்டே இருந்தால் எப்படி நிதி கொடுக்க முடியும்.

தர்மங்கள் ஜெயிக்க வேண்டும். அதற்கு இறைவன் சிலர் அவதாரங்கள் எடுப்பார். அந்த வகையில் கலியுகத்தில் இப்போது முருகன் அவதாரம் எடுத்துள்ளார். 2026-ல் அதற்கான பதில் கிடைக்கும்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News