தமிழ்நாடு செய்திகள்

ஈழத்தமிழர் விவகாரம்: கிங்டம் படம் வெளியான தியேட்டர் முன்பு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

Published On 2025-08-05 12:44 IST   |   Update On 2025-08-05 12:44:00 IST
  • தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது.
  • ‘கிங்டம்’ படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'கிங்டம்', ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. ஈழத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு; மிகப்பெரும் மோசடித்தனம்.

வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி, ஈழ சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து 'கிங்டம்' படம் தமிழகத்தில் வெளியாவதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், திரையரங்குகளில் படம் வெளியானது. இதையடுத்து தியேட்டர்கள் முன் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, 'கிங்டம்' படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தியேட்டர் முன்பு நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டதால் 'கிங்டம்' படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News