அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு: செங்கோட்டையன் தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- அமைச்சர் மக்களை பற்றி கவலைப்படாமல் பேசி வருகிறார்.
- அமைச்சராக இருந்த போது பெண்களை ஓசி பயணம் என்று சொன்னார்.
கோபி:
அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேச்சு கடும் சர்ச்சையானது. இதையடுத்து அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.செங்கோட்டையன் எம்.எல். ஏ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை 9:15 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம் மேடையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் பெரிய அளவில் இருந்தன. இதேபோல் தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படமும் பெரியளவில் இருந்தன.
மேலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்ற வாசகமும் இருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தார்கள். அந்த வழியில் எதிர்கட்சி தலைவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார்.
ஒரு அமைச்சர் எப்படி பேசவேண்டும், அதை விடுத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. ஆனால் அ.தி.மு.க தொண்டர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் கற்றுக்கொண்டு உள்ள பாடத்தை பின்பற்றி வருகிறார்கள்.
இந்திய ஒருமைப்பாடு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்ற அமைச்சர் இப்படி பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் மக்களை பற்றி கவலைப்படாமல் பேசி வருகிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் அ.தி.மு.க போராட்டம் முன்னெடுத்து உள்ளது. இது போன்றவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
அமைச்சராக இருந்த போது பெண்களை ஓசி பயணம் என்று சொன்னார். மக்கள் வரி பணத்தில் கொண்டு வந்த திட்டம் ஓசி என்று சொல்கிறார், அப்படி கொச்சைப்படுத்தி பேச அவருக்கு தகுதி இல்லை. அமைச்சராக இருக்க பொன்முடி தகுதியற்றவர். அமைச்சர் பொன்முடி பேச்சால் தி.மு.க அரசு தத்தளித்துக் கொண்டு தடுமாறி கொண்டு இருக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக தான் அ.தி.மு.க 2026ம் ஆண்டு புரட்சி தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தி.மு.க. செல்லும் பாதை சரியானதாக இல்லை. கொடிவேரி சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், கோபியில் புறவழிச்சாலை அமைக்கப்படும், கோபி முதல் தாராபுரம் வரை நான்கு வழிச்சாலை திட்டம் இந்தாண்டு நிறைவேற்றப்படும்.
வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முனைப்போடு இருந்து வருகிறோம். இதோடு அமைச்சர் பேசுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைப்போம். அதற்கு தொண்டானாக இருந்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.
100 நாள் தொழிலாளர்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் ஊதியம் பெறுவதற்கு சட்டமன்றத்தில் குரல் எடுப்போம். அது போல ஊதியம் வருவதற்கு எதிர்கட்சி தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பொன்முடி பேசிய வார்த்தைக்காக கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக ஒரு அமைச்சர் தான் பொறுப்பேற்கும் போது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் தீங்கு ஏற்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்கிறார்.
அப்படி உறுதிமொழி மீறி ஒரு அமைச்சர் இது போன்ற வார்த்தைகளை பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது. இதனை தி.மு.க அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு அமைச்சர் இப்படி பேசி இருக்க கூடிய நிலையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமைச்சர் பேச்சு மற்றவர்கள் புண்படும் அளவிற்கு குறிப்பாக பெண்கள் மனம் புண்படும் அளவிற்கு பெண்களை இழிவு படுத்தும் வார்த்தை என்பது அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலும் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. ஆகையால் இது போன்ற செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்குப் பிறகு என்ன முடிவுகள் மேற்கொள்ள வேண்டுமோ அதனை கழகப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முடிவு செய்வார். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, இது போன்ற நிலை ஏற்படும் போது அப்போது ஆட்சி காலத்தில் அ.தி.முக. இருந்த சூழலில் மூன்று மாதத்திற்கான தொகை அரசே வழங்கியது. அதற்குப் பிறகு மத்திய அரசு வழங்கிய நிதியை அரசு நிதியில் சேர்க்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.