இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்- எடப்பாடியை சாடிய அமைச்சர்
- கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.
- புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? #யார்_அந்த_SIR ? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளதாவது:-
முதலமைச்சராக இருந்தபோது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்.
இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.