தமிழ்நாடு செய்திகள்

#Congress பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான விவாதத்தை ஆதரிக்க வேண்டும்- அனைத்து எம்.பி.க்களுக்கும் மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்

Published On 2026-03-07 10:50 IST   |   Update On 2026-03-07 10:50:00 IST
  • முன்னாள் பிரதமர்களை பற்றி கூறப்பட்ட அவமதிப்பான கருத்துகளுக்கு நடவடிக்கை இல்லாதது.
  • சபாநாயகர் பதவிக்கு அவசியமான நடுநிலைத் தன்மை குறித்து எழும் கவலைகள்.

சென்னை:

பாராளுமன்ற காங்கிரஸ் துணை கொறடா மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

பல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு கையெழுத்திட்டு உள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டு உள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:-

* எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு மறுக்கப்படுவது

* எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.

* பொதுமக்களின் பிரச்சனைகளை எழுப்பியதற்காக எதிர்க்கட்சியினரை முழு அமர்வுக்கும் இடைநீக்கம் செய்தல்.

* முன்னாள் பிரதமர்களை பற்றி கூறப்பட்ட அவமதிப்பான கருத்துகளுக்கு நடவடிக்கை இல்லாதது.

* சபாநாயகர் பதவிக்கு அவசியமான நடுநிலைத் தன்மை குறித்து எழும் கவலைகள்.

இவை வெறும் அரசியல் கருத்து வேறுபாடுகள் அல்ல. பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மையையும், மரியாதையையும் நேரடியாக தொடும் விஷயங்கள்.

ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட, சபாநாயகர் நடத்தை குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் உரிமை ஜனநாயக மரபாக கடந்த காலங்களில் மதிக்கப்பட்டது.

அதுவே இந்திய ஜனநாயகத்தின் பலம், ஜனநாயக அமைப்புகள் கட்சி எல்லைகளைத் தாண்டி நடுநிலையாக இருக்க வேண்டும்.

இந்த மார்ச் 9-ந்தேதி பாராளுமன்ற வரலாற்றில் மீண்டும் ஒரு முக்கிய நாளாக அமையக்கூடும்.

அன்று, எம்.பி.க்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கை முழு சபைக்கும் சொந்தமானது — அது ஒரு அரசியல் கட்சிக்கானது அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

எனவே அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எல்லா எம்.பி.க்களும், பாராளுமன்றத்தின் மரியாதை, நடுநிலைத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளை காக்க, இந்த விவாதத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News