கரூர் கூட்டநெரிசல்: திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழப்பு - கண்கலங்க வைக்கும் சம்பவம்
- ஆகாஷ் (வயது 24) என்பவரும், கோகுலஸ்ரீ (வயது 24) என்பவருக்கும் திருமண நிச்சயம் நடந்தது.
- அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.
கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் நெஞ்சை உருக்கும் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரசார கூட்டத்திற்கு சென்ற திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (வயது 24) என்பவரும், கோகுலஸ்ரீ (வயது 24) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயம் நடந்தது. அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.
திருமண நிச்சயம் முடிந்த ஆகாஷ், கோகுலஸ்ரீ ஜோடி நேற்று கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகாஷ் தாய் கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது.