கரூரை கையிலெடுத்த அ.தி.மு.க.- தூத்துக்குடியை கையிலெடுத்த தி.மு.க.: சட்டசபையில் காரசார விவாதம்
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசினர்.
- அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை :
தமிழ்நாடு சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. முதலில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விவாதித்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க.வுக்கு இன்று ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு பேசினார்.
அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் எதை எதை நீக்க வேண்டும் என்று இருக்கையில் அமர்ந்து சொல்லுங்கள் என்று துரைமுருகன் கூறினார்.
இருப்பினும், சபாநாயகர் இருக்கையின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்ததால் அ.தி.மு.க.வினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.