தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?- கனிமொழி எம்.பி கண்டனம்
- புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது.
- பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020.
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரே பேசுவது வெளிப்படையான மிரட்டல். 40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?
அனுதினமும் எந்தெந்த வழிகளில் இந்தியைத் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020.
இந்த உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் செயல்களை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்களின் போராட்ட குணத்திற்கு பதில் சொல்ல நேரிடும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.