நல்லகண்ணு அய்யா விரைந்து நலம்பெற விழைகிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
- நல்லகண்ணுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், நல்லகண்ணு விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் - மாண்புமிகு அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.