கூகுள் மேப் போட்டு பார்த்து கடலில் இறக்கி காரை சோதனை செய்த கும்பல்: போதையால் விபரீதம்
- மது போதையில் காரை கடற்கரை ஓரமாக மணலில் ஓட்டியுள்ளார்கள்.
- 4 வீல் டிரைவ் காரினை கடலுக்குள் ஓட்டி விஷப்பரிட்சையில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் கடலூர் வழியாக பயணத்தை மேற்கொண்டனர். இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரை ஓரமுள்ள சாலையை பயன்படுத்தி கூகுள் மேப் மூலமாக பயணம் செய்தனர்.
கடலூர் சொத்திகுப்பம் பகுதி அருகே இவர்கள் சென்றபோது காரில் இருந்தவர்கள் மது போதையில் காரை கடற்கரை ஓரமாக மணலில் ஓட்டியுள்ளார்கள். 4 வீல் டிரைவ் கார் என்பதால் இந்த கார் மணலில் செல்லும் என்று இவர்கள் மணல் பரப்பு வழியாக சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது.
அந்தப் போட்டியில் போர் வீல் டிரைவ் கார் மணலில் மட்டுமல்ல கடலிலும் செல்லும் என அதில் ஒருவர் கூற காரை ஓட்டிக்கொண்டு வந்தவர் திடீரென கடலுக்குள் காரை இறக்கினார். சிறிது தூரம் சென்ற கார் திடீரென கடலில் நின்று விட்டது. கடலில் தத்தளித்த இவர்களை அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் உடனடியாக படகில் இருந்து இறங்கி 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் காரை காவல்துறை உதவியுடன் டிராக்டர் மூலம் கட்டி இழுக்கப்பட்டது. காரில் வந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தால் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 4 வீல் டிரைவ் காரினை கடலுக்குள் ஓட்டி விஷப்பரிட்சையில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.