தமிழ்நாடு செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் இலவச வைபை வசதி தொடக்கம்

Published On 2025-06-28 13:41 IST   |   Update On 2025-06-28 13:41:00 IST
  • வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள எண்களை பெறாமலேயே வைபை மூலம் இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளவும் இது வசதியாக இருக்கும்.
  • ஆர்ச் குளோபல் நிறுவனத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து இந்த இலவச வைபை வசதியை வழங்கி வருகிறது.

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் பயணிகளின் வசதிக்காக இலவச வைபை வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் இலவச இணைய சேவையை பயன்படுத்தும் வகையில் ஒரு கருவியும் வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அந்தக் கருவியில் தங்களது கைப்பேசி எண்ணை பதிவிட்டு அதன் மூலம் 45 நிமிடங்கள் வரை 500 எம்.பி. டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிகள் தங்களுக்கான வாகனங்களை முன்பதிவு செய்வதற்கும், வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள எண்களை பெறாமலேயே வைபை மூலம் இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளவும் இது வசதியாக இருக்கும்.

ஆர்ச் குளோபல் நிறுவனத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து இந்த இலவச வைபை வசதியை வழங்கி வருகிறது. மேலும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்-ஐ விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 'கியோஸ்க்' எனும் எந்திரத்தில் வைத்து ஸ்கேன் செய்தவுடன் அதிலிருந்து சிறிய கூப்பன் ஒன்று வெளிவரும். அதைப் பயன்படுத்தியும் இலவச வைபை வசதியை பெறலாம்.

தற்போது சென்னை விமான நிலையத்தில் 2 கருவிகள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக கூடுதல் கருவிகள் நிறுவ வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News