உறுதியான அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி... எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்
- தி.மு.க. அரசை தூக்கி எறிந்து அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
- டெல்லியில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்கிறார்.
சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். அப்போது, இயற்கையாக அமைந்த கூட்டணி அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி. தி.மு.க. அரசை தூக்கி எறிந்து அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி என்று தெரிவித்தனர்.
அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி உறுதியானதை தொடர்ந்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்கிறார். தொகுதி பங்கீடு விவகாரங்கள் குறித்து அவர் பேச உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. திருச்சியில் அமித் ஷாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மட்டும் சந்தித்தார்.