தமிழ்நாடு செய்திகள்

தஞ்சாவூரில் அண்ணா சிலை மீது தி.மு.க-பா.ஜ.க கொடிகளை இணைத்து போடப்பட்டதால் பரபரப்பு

Published On 2025-04-05 10:32 IST   |   Update On 2025-04-05 10:32:00 IST
  • அண்ணா சிலை அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் தி.மு.க மகளிர் அணி சார்பில் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெறுகிறது.
  • போலீசார் அண்ணா சிலை மீது போடப்பட்டு இருந்த 2 கட்சி கொடிகளையும் அகற்றினர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. அண்ணா பிறந்தநாள், நினைவுநாள் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று அண்ணா சிலை அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் தி.மு.க மகளிர் அணி சார்பில் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அந்த பகுதி முழுவதும் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நள்ளிரவில் பேரறிஞர் அண்ணா சிலை மீது தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கொடிகளை இணைத்து மர்ம நபர்கள் போட்டனர்.

இன்று காலை இதனை பார்த்து கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து நிர்வாகிகள் திரளானோர் அங்கு திரண்டனர். உடனடியாக மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணா சிலை மீது போடப்பட்டு இருந்த 2 கட்சி கொடிகளையும் அகற்றினர். இதனை தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தி.மு.க.வினர் மரியாதை செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுயில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News