தமிழ்நாடு செய்திகள்

S.I.R. பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்- மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2025-11-09 10:50 IST   |   Update On 2025-11-09 10:50:00 IST
  • தேர்தலுக்காக இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.
  • நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சென்னை:

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

பூத் வாரியாக கட்சி நிர்வாகிகள் நியமித்து அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். வீடு வீடாக வாக்காளர் பட்டியலை சரி பார்த்து யார் யாருக்கு ஓட்டுகள் விடுபட்டுள்ளது. வீட்டு முகவரி மாறியவர்கள் யார் யார்? என்ற பட்டியலை சேகரித்து அவர்களது ஓட்டுகளையும் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த மாதம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதால், அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கண்டித்து வருகிற 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது கட்சிப் பணிகள் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்காக இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.

அது மட்டுமின்றி தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்தும் விரிவாக பேசினார்.

சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஒன்றிய அரசின் கைப்பாவையாக எதேச்சதிகார போக்குடன் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும், கூறினார்.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலை தேர்தலுக்கு பிறகு நடத்தலாம் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியும் அதை தேர்தல் ஆணையம் கேட்கவில்லை.

சிறுபான்மையினர் வாக்குகள் பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றை குறிவைத்து நீக்கும் நோக்கோடு தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும் சதித் திட்டம் நடைபெறாமல் இருக்க அனைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தேர்தலுக்காக ஆரம்ப கட்ட பணிகள் ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்து முடித்திட வேண்டும் என்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இது தவிர கட்சி பணிகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன் விரிவாக ஆலோசித்தார்.

இந்த ஆலோசனையில் மாவட்ட கழக செயலாளர்களுடன் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News