தமிழ்நாடு செய்திகள்

3 தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2025-06-28 12:47 IST   |   Update On 2025-06-28 12:47:00 IST
  • முதல் நாள் அன்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
  • மாவட்ட நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்களா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயலாற்றி வருகிறார்.

இதற்காக அனைத்து தொகுதிகளிலும் கட்சியினரை ஊக்கப்படுத்தி பணியாற்ற செய்யும் விதமாக உடன்பிறப்பே வா என்கிற தலைப்பில் நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தி வருகிறார். கடந்த 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி அவ்வப்போது சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதல் நாள் அன்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து இதுவரை 18 தொகுதி நிர்வாகிகளை நேரில் அழைத்துப் பேசி அவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு உள்ளார்.

இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையம், அந்தியூர், மொடக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடமும் தொகுதிகளில் உள்ள நிலவரங்களை அவர் கேட்டறிந்தார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தொகுதிகளின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர்.

இவர்களோடு தனித்தனியாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உங்களது தொகுதியில் அரசின்நலத்திட்ட பணிகள் முழுமையாக சென்றடைந்துள்ளதா?

நமது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? உள்ளூர் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்கிறதா? மாவட்ட நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்களா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மொடக்குறிச்சி, மேட்டுப்பாளையம், அந்தியூர் ஆகிய 3 தொகுதிகளிலும் உள்ள கள நிலவரங்களை முதலமைச்சரிடம் எடுத்து கூறி இருக்கிறார்கள்.

முதல் கட்டமாக 75 முக்கிய தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றுடன் 21 தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி இருக்கிறார்.

மீதமுள்ள 54 தொகுதி நிர்வாகிகளையும் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் அழைத்து பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடன் ஒரு மணி நேரத்துக்கும் குறையாமல் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. அரசின் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து தி.மு.க.வை மீண்டும் வெற்றி பெற செய்ய அனைவரும் உழைக்க வேண்டும் என்று இந்த ஆலோசனைக் கூட்டங்களின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News