தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை மீண்டும் மாற்றம்- கன்னியாகுமரிக்கு 24-ந்தேதி வருகிறார்

Published On 2026-02-14 15:04 IST   |   Update On 2026-02-14 15:04:00 IST
  • புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
  • கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.

நாகர்கோவில்:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அவர் குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் வருகை தருவதாக இருந்தது. பின்னர் அந்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு 23, 24 ஆகிய தேதிகளில் வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், முதலமைச்சரின் சுற்றுப்பயண தேதி மீண்டும் மாற்றப்பட்டு உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, பிப்ரவரி 24 மற்றும் 25-ந்தேதிகளில் அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முதல் நாள் அன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, புத்தளம் கல்லடிவிளையில் மு.க.ஸ்டாலின் படைப்பகம் மற்றும் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து உரையாற்றுகிறார். பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு அவர் நாகர்கோவிலிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

அதன்பிறகு மறுநாள் காலை நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேடை மற்றும் பந்தல் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். விழாவிற்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா மற்றும் அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். அதன்பிறகு தற்போது மீண்டும் குமரி மாவட்டத்திற்கு வருகை தருவது தி.மு.க. நிர்வாகிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதலமைச்சரின் வருகை குமரி மாவட்ட தேர்தல் களத்தை சூடுபடுத்தி உள்ளது. 

Tags:    

Similar News