பிளானில் மாற்றம்..! பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினரை ரிசார்ட்டில் தனித்தனியாக சந்திக்கும் விஜய்
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.
- ரூ.20 லட்சம் நிவாரண தொகையானது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். மேலும், அவர்களது குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அப்போது விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து கடந்த 17-ந் தேதி விஜய் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண தொகை வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பானது நடைபெறவில்லை. இதனிடையே கடந்த 18-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரண தொகையானது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் கரூருக்கு எப்போது சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டது. ஆனால், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்து, அவர்களை அழைப்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்றுள்ளனர்.
பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விரைவில் சென்னைக்கு சென்று விஜய்யை சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் தேதியானது விரைவில் தெரிவிக்கப்படும் எனவும், போக்குவரத்து ஏற்பாடுகள் த.வெ.க. சார்பில் செய்து தரப்படும் எனவும் த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்பட்டது.
கரூரில் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை மொத்தமாக நாளை மறுநாள் மாமல்லபுரத்துக்கு வரவழைத்து த.வெ.க. தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது சந்திப்பு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் 41 அறைகளில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், பின்னர், விஜய் ஒவ்வொரு அறைக்கும் சென்று அவர்களை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.