கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்கள் சி.பி.ஐ. முன்பு ஆஜர் ஆக வந்தவர்கள்
கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 7 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
- கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- இதுவரை மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
கரூர்:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகி யோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருக்கும் கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 7 பேர் இன்று வந்தனர். அவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது நடந்தது என்ன? என்பது குறித்த பல்வேறு கேள்விகளை அவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர்.
அதற்கு ஆஜர் ஆனவர்கள் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.