'பள்ளி மாணவர் தாக்கப்பட்டது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல' - அரசின் தகவல் சரிபார்ப்பகம் தகவல்
- தமிழ்நாடு காவல்துறையை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் நடந்ததைப் போன்று குறிப்பிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள்.
சென்னை:
பள்ளி மாணவர் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் 'டேக்' செய்யப்பட்டு தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து இருக்கிறது.
அதில், "அரசு இளநிலை கல்லூரியில் ராகிங் என்ற பெயரில் மாணவன் அடித்துக் கொல்லப்படுவதாக தமிழ்நாடு காவல்துறையை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லை. ஆந்திர மாநிலம் பாலநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளியில் கடந்த ஆகஸ்டு மாதம் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பு மாணவரை தாக்கியுள்ளனர். அந்த காணொளியை தமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் நடந்ததைப் போன்று குறிப்பிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள். வதந்திகளை நம்பாதீர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.