பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும்... கையில் செருப்புடன் அதிமுகவினர் போராட்டம்
- தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அமைச்சர், பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து அமைச்சர், பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதில், "இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பெண்களை இழிவாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிர் அணியினர் கையில் செருப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்தியா உள்ளிட்ட முக்கிய பெண் நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.