செங்கோட்டையனுக்கு அடையாளம் கொடுத்ததும்.. பதவி கொடுத்ததும் அதிமுக..!- எடப்பாடி பழனிசாமி
- வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
- அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.
கோபிச்செட்டிப்பாளையத்திற்கு பிரசாரத்திற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கூட்டத்தில், கோபிச்செட்டிப்பாளையத்தில் LED திரையில் வீடியோக்களை காண்பித்து, செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது கோபி தொகுதி முதன்மை தொகுதியாக மாற நடவடிக்கை எடுக்கப்படும்.
கோபிசெட்டிபாளையமே அதிரும் வகையில் கூட்டம் கூடியுள்ளது. யார் யாரோ கனவு காண்கிறார்கள், அந்த கனவை அனைத்து மக்களும் வெள்ளமாக திறண்டு நொறுக்கிவிட்டீர்கள்.
50 ஆண்டுகளாக போராடி வந்த அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது. மாநில நிதியிலேயே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றினேன்.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு எந்த திட்டமும் செய்யப்படவில்லை.
டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ஓடோடி சென்று பார்த்தேன். விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் ஓடோடி சென்று உதவி செய்த இயக்கம் அதிமுக.
இந்தத் தொகுதியில் ஒருவர் எம்எல்ஏவாக இருந்தார். நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகினார். ஆனால் ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டாரா?
அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கான நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ பங்குபெறவில்லை
அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் சொன்னார்.
ஆனால் இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்தீர்கள்?
உங்களுக்கு அடையாளம் கொடுத்தது அதிமுக. பதவி கொடுத்தது அதிமுக.
எம்ஜிஆர் ஆட்சியில் MLA-வாக இருந்தார். ஜெயலலிதா மற்றும் எனது ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அப்பொதெல்லாம் தூய்மையான ஆட்சி தரவில்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.