தமிழ்நாடு

அரசு ஆஸ்பத்திரியில் மின் தடையால் வென்டிலேட்டர் செயலிழந்து பெண் உயிரிழப்பு?

Published On 2023-11-27 07:08 GMT   |   Update On 2023-11-27 07:12 GMT
  • சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
  • தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

திருவாரூர்:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த சிவனாகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அமராவதி (வயது 48).

இவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து அமராவதிக்கு கொடுக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிக்கு வரும் மின்சாரம் தடைப்பட்டு சிறிது நேரத்தில் கருவி செயலிழந்துவிட்டது. இதனால் அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். உயிரிழந்த அமராவதியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமராவதியின் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து ஆஸ்பத்திரி டீன் கூறுகையில், 10 நிமிடங்களுக்குள் தடைபட்ட மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. மின்சாரம் தடைபட்டாலும் வென்டிலேட்டர் கருவிகள் இயங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்து வருகிறது. உயிரிழப்புக்கு மின் தடை காரணமில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News