தமிழ்நாடு செய்திகள்

சேலம், கோவை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

Published On 2024-01-27 12:44 IST   |   Update On 2024-01-27 14:10:00 IST
  • பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
  • தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை, சேலம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 3 குழுக்களை அமைத்து உள்ளார்.

அதன்படி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு, மேற்பார்வை குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 24-ந் தேதி (புதன்கிழமை) நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த கூட்டத்தில் கோவை மற்றும் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவர்களிடம் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

மேலும் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.

தொடர்ந்து இன்று மாலையில் நீலகிரி, திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கான தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மேலும் வருகிற 5-ந்தேதி வரை தொகுதி வாரியாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்துகிறது.

Tags:    

Similar News