வீட்டிற்குள் புகுந்து புதுப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி- சத்தம் போட்டதால் தப்பி ஓட்டம்
- அதிர்ச்சியடைந்த புதுப்பெண் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.
- வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை:
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள 80 அடி ரோட்டை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுப்பெண் அவரது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று புதுப்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
புதுப்பெண் மதியம் சமையல் வேலைகளை முடித்து சாப்பிட்டு விட்டு வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டு இருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
வாலிபர் இளம்பெண்ணை கீழே தள்ளி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.
இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அதற்குள் வாலிபர் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இதில் அதிர்ச்சியடைந்த புதுப்பெண் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தர்மபுரியை சேர்ந்தவரும் தற்போது 80 அடி ரோட்டில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி ஆனந்த் (வயது 21) என்பது தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆனந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணை பட்டப்பகலில் வாலிபர் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.