தமிழ்நாடு

கல்லூரி மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்: காதலன் கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலை

Published On 2023-06-03 05:42 GMT   |   Update On 2023-06-03 05:42 GMT
  • திருமணம் செய்ய காதலன் மறுத்து விட்டதால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்ததும், இதனால் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
  • பிரேத பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக இருந்தது உறுதியானது. பின்னர் மாணவியின் உடல் மீண்டும் அங்கேயே புதைக்கப்பட்டது.

கோத்தகிரி:

கோத்தகிரியை அடுத்த ஊட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டன்னி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.

இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்தார்.

விடுமுறைக்கு ஊருக்கு வந்த மாணவி கடந்த 30-ந்தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை குறித்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

சம்பவத்தன்று இறந்த மாணவியின் சகோதரி மற்றும் பெற்றோர் வீட்டின் பீரோவில் இருந்த செல்போனை எடுத்து பார்த்தனர்.

அப்போது மாணவி, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி டிரைவரான நந்தகுமார்(32) என்பவருடன் அதிக முறை பேசியிருப்பது ரெியவந்தது. இதையடுத்து அவர்கள் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மாணவியும், வீட்டின் அருகே வசிக்கும் நந்தகுமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

நெருங்கி பழகியதில் மாணவி கர்ப்பமாகி விட்டார். இதையடுத்து மாணவி, வாலிபரை தொடர்பு கொண்டு தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார்.

ஆனால் அந்த வாலிபர், நீ வேறு ஜாதி, நான் வேறு ஜாதி. உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டார். மாணவி திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை மாணவிக்கு அந்த வாலிபர் அனுப்பி உள்ளார்.

திருமணம் செய்ய காதலன் மறுத்து விட்டதால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்ததும், இதனால் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மாணவி கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை அறிய புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி ஊட்டி ஆர்.டி.ஓ., துரைசாமி உத்தரவின் பேரில், தாசில்தார் ராஜசேகரன், வி.ஏ.ஓ., அஜய் கான், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில், தொட்டன்னி பகுதியில் புதைக்கப்பட்ட மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக இருந்தது உறுதியானது. பின்னர் மாணவியின் உடல் மீண்டும் அங்கேயே புதைக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த நந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News