தமிழ்நாடு

சென்னையில் மட்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பு- மாநகராட்சி புதிய திட்டம்

Published On 2023-06-08 08:48 GMT   |   Update On 2023-06-08 08:48 GMT
  • மட்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
  • மின்சாரம் தயரிப்பதற்காக கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மின் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.

சென்னை:

சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மட்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வுக்கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி, மின்வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் பங்கேற்றனர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் மறுசுழற்சி செய்ய முடியாத மட்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயரிப்பதற்காக கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மின் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலை ரூ. 350 கோடியில் அமைக்கப்படும். தினமும் 14 லட்சம் கிலோ குப்பைகளை பயன்படுத்தி 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதில் கிடைக்கும் மின்சாரத்தை மாநகராட்சி அலுவலகங்களில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

இந்த மின் உற்பத்தி ஆலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிபுணர் குழுவின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதி பெற்று டெண்டர் கோரப்படும். பின்னர் மின் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News