தமிழ்நாடு

சைக்கிள் சின்னம் கேட்டு ஜி.கே.வாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2024-02-21 10:29 GMT   |   Update On 2024-02-21 10:29 GMT
  • த.மா.கா.வுக்கு மீண்டும் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கும் படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.
  • அடுத்த 4 வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம்.

சென்னை:

ஜி.கே.மூப்பனார் கடந்த 1996-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இதையொட்டி அவரது கட்சிக்கு கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த தேர்தல்களில் த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னமே ஒதுக்கப்பட்டது.

மூப்பனார் மறைவுக்கு பிறகு ஜி.வா.வாசன் த.மா.கா.வை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். அதன்பிறகு அவர் 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் த.மா.கா.வை தொடங்கினார்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி த.மா.கா.வுக்கு மீண்டும் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கும் படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார். ஆனால் இதுவரை த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

இதையடுத்து த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி ஜி.கே.வாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் வழக்கு மனுவில், 'வருகிற பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தேன். அடுத்த 4 வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், என்னுடைய மனு மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபீக் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.

Tags:    

Similar News