தமிழ்நாடு

கோடை மழை-சூறைக்காற்றால் சேதமான பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Published On 2023-06-08 10:00 GMT   |   Update On 2023-06-08 10:00 GMT
  • 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
  • அமைச்சர், விவசாயிகளை மிரட்டியது மிகுந்த கண்டனத்திற்குரியது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 5-ந்தேதி அன்று சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கோடை மழையின் காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை, ஒதடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், வெள்ளகரை, கொடுக்கன்பாளையம், ராமாபுரம், அன்னவல்லி மற்றும் காரைக்காடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20 கிராமங்களில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு போன்ற பயிர்கள் முழுமையாக சேதமடைந்தும், தேக்கு, பலா போன்ற மர வகைகளும் சேதம் அடைந்து விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

விருத்தாச்சலம் தொகுதிக்குட்பட்ட எருமனூர், ராசாபாளையம், தொட்டிக்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் வாழை மற்றும் கரும்பு சாகுபடி செய்திருந்த நிலையில், திடீரென சூறாவளிக் காற்று வீசியதன் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மற்றும் பலா மரங்கள் போன்றவை சேதமடைந்ததால் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்து உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சேதமடைந்த பகுதிகளை பார்வையிட வந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெயரளவில் ஒரு இடத்தில் மட்டும் ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்போது விவசாயிகள் சேதமடைந்த அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியபோது நடந்த வாக்குவாதத்தில், விரக்தியில் பேசிய ஒரு விவசாயியை அமைச்சர் மிரட்டிய நிகழ்வு, அப்பகுதி விவசாயிகளை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியதாக செய்திகள் மூலம் தெரியவருகிறது. அமைச்சர், விவசாயிகளை மிரட்டியது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கோடை மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குறிஞ்சிபாடி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு சேதமடைந்த வாழை, கரும்பு போன்ற பயிர் வகைகளையும் மற்றும் பலா, தேக்கு போன்ற மர வகைகளையும்; அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த முருங்கை மரங்களையும் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கோடை மழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களையும், உடனடியாக வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாமிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News