65 ஆயிரம் பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்தும் பாரதிய ஜனதா
- தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் பூத் கமிட்டிகளுக்கு பா.ஜ.க. சார்பில் சிறப்பு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ஒவ்வொரு பூத்துக்கும் தலா 2 பேர் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்கு சதவீதத்தை பெற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது.
குறிப்பாக 20 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் நிர்வாகிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்தது. அப்போது மூத்த நிர்வாகிகள் பேசுகையில், "தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் அடிமட்ட பலத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் பூத் கமிட்டிகளுக்கு பா.ஜ.க. சார்பில் சிறப்பு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பூத்துக்கும் தலா 2 பேர் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று பூத் நிர்வாகிகளை சந்தித்து பேசி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பூத் கமிட்டி உறுப்பினர்கள் மூலம் கிராம மக்களிடம் பாரதிய ஜனதாவுக்கு முழுமையான ஆதரவு திரட்ட வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.