பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட பா.ஜனதாவுக்கு கிடைக்காது
- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
- தமிழ்நாடு செலுத்தும் 1 ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால் மோடி அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
ஆனால் 5 ஆண்டு காலம் முடிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எய்ம்ஸ் கல்லூரிக்காக பிரதமர் மோடி நாட்டிய ஒற்றை செங்கல்லை வைத்து இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது.
ஆனாலும் இன்னும் எய்ம்ஸ் கல்லூரி கட்டப்படவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். ஆனாலும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வுக்கு வந்து சென்ற பிறகும் நிவாரணத்துக்காக சல்லி பைசா கூட தரவில்லை.
எங்களிடம் இருந்து பறித்து வைத்துள்ள நிதியில் 71 சதவீதத்தில் இருந்து 10 சதவீதத்தை கொடுங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம். தமிழ்நாடு செலுத்தும் 1 ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது.
தமிழகத்துக்கு நிதி வழங்காமல் ஒன்றிய அரசு அல்வா கொடுப்பதால் அதற்கு பதில் சொல்லும் விதமாக இந்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு அல்வா கொடுக்கப்போகிறார்கள். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட பா.ஜனதா கட்சிக்கு கிடைக்காது.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.