தமிழ்நாடு

காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

Published On 2022-06-24 07:36 GMT   |   Update On 2022-06-24 07:36 GMT
  • கோவில் இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளை மூடி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • வீடுகளை காலி செய்ய அவகாசம் கொடுத்து அதிகாரிகள் சென்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த சயனாவரம் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 28 ஏக்கர் 78 சென்ட் நிலம் உள்ளது. இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது

இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பில் இருந்த 14 ஏக்கர் 51 சென்ட் நிலத்தை போலீசார் பாதுகாப்புடன் மீட்டனர். பின்னர் அந்த இடத்தில் பெயர்ப்பலகை, எல்லைக்கற்களை நட்டு வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கோவில் இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளை மூடி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதே போல் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு அங்கு குடியிருந்தவர்களிடம் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசித்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மூன்று தலைமுறைகளாக வசித்து வருவதால் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரி செலுத்துகிறோம் என்றும் தெரிவித்தனர்.

இதற்கிடையே பெண் ஒருவர் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றார். அவரை பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து சமாதானப்படுத்தினர்.

தகவல் அறிந்ததும் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் அங்கு வந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடனும், பொதுமக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து வீடுகளை காலி செய்ய அவகாசம் கொடுத்து அதிகாரிகள் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News