மேலூர் அருகே விபத்து: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 26 பேர் படுகாயம்
- பள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
- 6 பேரின் நிலைமை மோசமாக இருந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலூர்:
நெல்லை மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த 42 பெண்கள் உள்பட 50 பேர் தனியார் பஸ்சில் இன்று காலை மேல் மருவத்தூர் கோவிலுக்கு புறப்பட்டனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் காலை 10 மணியளவில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள பள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் ரோட்டோர பள்ளத்தில் பஸ் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் பெண்கள் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 6 பேரின் நிலைமை மோசமாக இருந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோபா, ஏட்டு தெய்வேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.